Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் உயர்ரக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், சென்னை விமான நிலைய ஏர் இன்டலிஜென்ட் அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனை செய்தனர்.
இதில், தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து இன்று அதிகாலை தனியார் பயணிகள் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர்.
அப்போது, வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று ஆண் பயணிகள் மீது சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்படி, அவர்களிடம் விசாரணை செய்த போது அவர்கள் மூவரும் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, அதிகாரிகளின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.
தொடர்ந்து, அவர்களின் உடமைகளை ஆய்வு செய்த போது பையில் உணவு பொருட்களுக்கு அடியில் ஹைட்ரோபோனிக் (Hydroponic) எனப்படும் உயர் ரக கஞ்சா மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
மூன்று வட மாநில பயணிகளையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களின் உடைமைகளிலிருந்து சுமார் 30 கிலோ ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.30 கோடி என கூறப்படுகிறது. தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு குருவியாக செயல்பட்டது தெரியவந்தது.
இதனால், போதைப்பொருள் தடுப்புச் சட்டம், சுங்க சட்டம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய கும்பலின் முக்கிய புள்ளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயர்ரக கஞ்சாவை கடத்திக்கொண்டு சென்னை வந்தது ஏன்? இந்தக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? சென்னை கொண்டு வந்து சாலை மற்றும் ரயில் மூலமாக வட மாநிலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதா? என்று பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN