Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 14 நவம்பர் (ஹி.ச.)
பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்தது. மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று (நவ 14) வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
மொத்தம் உள்ள 243 இடங்களில் சுமார் 191 இடங்களில் பாஜ, ஜேடியு கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.ஆரம்பத்தில் 76 இடங்கள் வரை முன்னிலையில் இருந்த ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி, அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து, தற்போது 48 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் தேஜ கூட்டணி, மஹாகட்பந்தன் கூட்டணியை கடந்து, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அவரது கட்சி 238 தொகுதிகளில் தனித்து களம் கண்டது.
ஆனால், இந்தத் தேர்தலில் ஒரு இடத்திலும் ஜன் சுராஜ் கட்சி முன்னிலை பெறாதது, அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதில் கிங் மேக்கராக ஜொலித்த பிரசாந்த் கிஷோர், இந்த தேர்தலில் தோல்வியை தழுவுகிறார்.
இந்தத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஜக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலை விட்டு விலகுவேன் என்று பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்திருந்தார்.
தற்போது, நிதிஷ் குமாரின் கட்சி 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலத்தை நிதிஷ்குமார் முடித்து விட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b