Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)
SIR-க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தவகெ சார்பில் நவ.16ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (Special intensive revision) நடந்து வருகிறது.
தமிழகத்தில் இந்த பணி கடந்த நவ.4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு, வீடாக சென்று விண்ணப்பங்ககளை வழங்கி வருகிறார்கள். ஆனால், இந்த சிறப்பு திருத்த பணியில் குழப்பங்கள் இருப்பதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
அதோடு, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒரு சிலருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் வீடு வீடாக செல்கின்றனர். அவர்கள் வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பங்களை சரி செய்து வைக்கின்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்தது. இதில், அதிமுக, தவெக, பாமக உள்ளிட்ட சில கட்சிகளை தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் பங்கேற்றன.
அந்த கூட்டத்தில் SIRக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதோடு, உச்சநீதிமன்றத்தில் அதற்கு எதிராக மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் SIRக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், SIRக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டன. விஜய்யின் தவெகவும் SIRக்கு எதிர்ப்பு தெரிவித்தது. எனினும், அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து விஜய் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சார்பில் வருகிற 16ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் தலைமை தாங்குகிறார்கள்.
சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்க இருக்கிறார். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர்களுக்கு இ-மெயில் மூலம் உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கியுள்ளது.
குறிப்பாக, போலீசார் அனுமதி அளிக்கும் இடத்தில் மட்டும்தான் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும், எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களுக்கும், சாலை போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்ட விவரங்களை உடனுக்குடன் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN