Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு தாள் -1 தேர்வும் பி.எட். முடித்த பட்டதாரிகளுக்கு தாள்-2. தேர்வும் நடத்த அறிவிக்கப்பட்டது.
தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. நவம்பர் 1 மற்றும் 2-ந்தேதி நடை பெறுவதாக இத்தேர்வு அறிவிக்கப்பட்டது.
கல்லறை திருநாள் என்பதால் இதனை வருகிற 15 மற்றும் 16-ந்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.
இத்தேர்வை 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். தாள்-1 தேர்வை ஒரு லட்சத்து 370 பேர் எழுத உள்ளனர். இதேபோல ஞாயிற்றுக்கிழமை தாள்-2 வது தேர்வு நடக்கிறது. இதனை 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேர் எழுதுகிறார்கள்.
தாள்- 1 தேர்வு 367 மையங்களிலும், தாள்-2 தேர்வு 1241 மையங்களிலும் நடைபெறுகிறது. இத்தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணி வரை நடைபெறும்.
தேர்வு கூடத்திற்கு 9.30 மணிக்குள் வர வேண்டும். அதற்கு மேல் வந்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும். அதாவது காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வினர் கருப்பு 'பால் பென்' மூலம் எழுத வேண்டும். தேர்வினை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 வருடத்திற்கு பிறகு இத்தேர்வு நடைபெறுகிறது. பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. எவ்வித முறைகேட்டிற்கும் இடம் அளிக்காத வகையில் தேர்வு மையங்கள் தீவிரமாக கண் காணிக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
தேர்வு கண்காணிப்பு அதிகாரியாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனும், மதுரை மாவட்டத்திற்கு இயக்குனர் நரேசும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM