Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 2 நவம்பர் (ஹி.ச.)
கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது.
இங்கு ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை பெற்றவர்கள், விசாரணை கைதிகள் என சுமார் 2 ஆயிரம் கைகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சிறையில் கைதிகள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் ஆயுதம் போன்றவை பதுக்களை தடுக்கவும் அடிக்கடி சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கைதிகள் அறையில் சோதனை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் சிறை வார்டன் சிவராஜன் என்பவர் சிறைச் சாலையில் உள்ள டவர் பிளாக் பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு மெயின் கேட் அருகில் 3 வது ஷட்டர் பகுதியில், இரும்பு தட்டு ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.1.5 மீட்டர் நீளத்தில் இருந்த அந்த தட்டு ஆயுதம் போன்று மடக்கி தயாரித்து மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து சிறை வார்டன் அதிர்ச்சி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது அதை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ரத்தினபுரி கணேஷ் நகர் ஏ. எம். காலனியைப் சேர்ந்த கௌதம் என்ற ஒன்றரை கவுதம் மற்றும் அவருடன் சிறையில் உள்ள அறையில் தங்கி உள்ள நெல்லை மாவட்டம் சங்கர் நகர் வடக்குத்தாலையிட்டு பகுதியைச் சேர்ந்த பிரவீன் ராஜ் (வயது 34) ஆகியோர் அதை மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது.
இதை ஆயுதம் போன்று தயாரித்து அவர்கள் எதற்காக மறைத்து வைத்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
கடந்த 28 ஆம் தேதி சிறை அதிகாரிகள் சிறைச் சாலையில் சோதனை செய்த போது கௌதம் 50 கிராம் கஞ்சாவை வைத்து இருந்ததை சிறை வார்டன்கள் கைப்பற்றி உள்ளனர். ஆனால் அவர் அதை தான் கொண்டு வரவில்லை என்று கூறி உள்ளார்.
இதில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறியதாக நினைத்து கௌதமிற்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது. எனவே சிறை அதிகாரிகளை பழி வாங்குவதற்கு அவர் தன்னுடன் தங்கி உள்ள நெல்லை பிரவீன் ராஜுடன் சிறைச் சாலையில் கலவரம் ஏற்படுத்துவதற்காக இரும்பு பிளேட்டை ஆயுதமாக்கி மறைத்து வைத்து இருந்து உள்ளார் என்று போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர். பிரச்சனை ஏற்படும் போது அதை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர்கள் நினைத்து இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து சிறை வார்டன் சிவராஜன் கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கௌதம் மற்றும் பிரவீன் ராஜ் ஆகியோர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Hindusthan Samachar / V.srini Vasan