கோவை சிறுமி கொலை வழக்கு - தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை
கோவை, 23 மே (ஹி.ச.) கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் (NCW) தாமாக முன்வந்து (Suo Motu) நடவடிக்கை எடுத்துள்ளது. தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்ட
மகளிர்


கோவை, 23 மே (ஹி.ச.)

கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் (NCW) தாமாக முன்வந்து (Suo Motu) நடவடிக்கை எடுத்துள்ளது.

தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மாயமான நிலையில், பின்னர் கண்ணம்பாளையம் ஏரி அருகே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹட்கர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதி, உடனடி, கடுமையான மற்றும் காலவரையறைக்குட்பட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை (ATR) ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (FIR), பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்சோ (POCSO) சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட பிரிவுகள், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கைது மற்றும் காவல் விசாரணை விவரங்கள், பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வு முடிவுகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள உளவியல் ஆலோசனை, பாதுகாப்பு மற்றும் ஆதரவு நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அறிக்கையில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணையை உணர்திறனுடனும் அவசரத்துடனும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள தேசிய மகளிர் ஆணையம், சிறுமிகளுக்கு எதிரான கொடூர வன்முறைகள் மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை என்றும், குற்றவாளிகள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P