Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 மே (ஹி.ச.)
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக செவிலியர் மாணவி உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏழை எளிய மக்களின் நம்பிக்கையாக உள்ள அரசு மருத்துவமனைகள் உயிர் பறிக்கும் நிலையங்களாக மாறிவருவது வேதனையளிக்கிறது. இதனை ஆளும் அரசு அலட்சியமாக கையாள்வது ஏன் என்பது புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாற்றத்தை வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசு, சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்யாமல் மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே அளித்து வருகிறது” என்றும் விமர்சித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளின் தரத்தினை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, ஏழை மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அரசு அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறப்படும் செவிலியர் மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ