Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 மே (ஹி.ச.)
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், “ஆட்சி மாறினாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தின் நிலையை வெளிப்படுத்துகின்றன. குற்றங்கள் நடந்த பின் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், அவை நடைபெறுவதற்கு முன்பே தடுக்கக்கூடிய குற்றத்தடுப்பு அமைப்புகளும் வலுப்படுத்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருட்களின் பரவலே இத்தகைய கொடூரச் சம்பவங்களுக்கு காரணமாக இருப்பதாகவும், அதன் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், சிறுமி படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் துயர்துடைப்புத் தொகை வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ