Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மே (ஹி.ச.)
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்(ஆர்.டி.இ) என்பது இந்தியாவில் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான தொடக்கக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் அடிப்படை உரிமைச் சட்டம் ஆகும்.
தமிழ்நாட்டில் இச்சட்டத்தின் (ஆர்.டி.இ) கீழ், தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை எளிய மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 18-ந்தேதி வரை நடந்தது. மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 537 விண்ணப்பங்கள் வந்திருந்தன.
இதனை தொடர்ந்து, ஒதுக்கீட்டு இடங்களை விட விண்ணப்பங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருந்ததால், அரசு வழிகாட்டுதலின்படி நேற்று முன்தினம் அந்தந்த பள்ளிகளில் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் முன்னிலையில் வெளிப்படையான குலுக்கல் முறை நடைபெற்றது.
இதன் அடிப்படையில் மாணவர்களுக்கான தற்காலிக சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்டு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 7,740 பள்ளிகளில் 2,51,537 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 82,888 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒருசில மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள வாய்ப்புகள் இருப்பதால், தற்போது வெளியிடப்பட்டுள்ள சேர்க்கை உத்தரவுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
இதை தொடர்ந்து மாணவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் தேர்வாகியிருந்தால், பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இறுதிச் சேர்க்கை வழங்கப்படும்.
இது குறித்த முழுமையான மற்றும் இறுதி விவரங்கள் அடுத்த வாரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b