Enter your Email Address to subscribe to our newsletters

உடுமலைப்பேட்டை, 09 ஜூன் (ஹி.ச)
திருப்பூர் மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களான காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி தொடர்பான ஒப்பந்தப்புள்ளிகளை பெறுவதில், உடுமலை மின்வாரிய அலுவலகத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடுகள் நடந்ததாக தலைமை அலுவலகத்துக்கு ரகசிய புகார்கள் சென்றன.
இந்த புகார்களை தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி தொடர்பான டெண்டர்களை முறைகேடான வழிகளில் பெறுவதற்கு மின்வாரிய அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், உடுமலைப்பேட்டை மின் பகிர்மான வட்டத்தில் பணியாற்றி வந்த கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயல் பொறியாளர் ஆகிய இருவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராதாகிருஷ்ணன் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரம் காற்றாலை மின் உற்பத்திக்கு பெயர் பெற்ற பகுதியாகும். இங்கு ஏராளமான தனியார் காற்றாலைகள் மற்றும் சூரிய மின் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், டெண்டர் முறைகேடு புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நடவடிக்கையால் மின்வாரிய அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b