Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)
சென்னை துறைமுகத்தில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டு தலைமை செயலகத்தில் காற்று மாசடைந்தது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை துறைமுகம், சென்னை மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை காமராஜர் சாலை மற்றும் தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 ம் தேதி மதியம் 12.15 மணியளவில் திடீரென வெள்ளை நிறப் புகை சூழ்ந்தது.
இதனால் தலைமை செயலகம், ரிசர்வ் வங்கி மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் பகுதிகள் காற்று மாசடைந்து பொதுமக்கள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு இருமல், கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.
சென்னை துறைமுக வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த கந்தகம் கோடை வெப்பம் காரண மாக வேதியியல் மாற்றம் அடைந்து தீப்பிடித்ததாலோ அல்லது அங்கிருந்த கண்டெய்னர் ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாகவோ இந்த நச்சு வாயு காற்றில் பரவியது தெரியவந்தது. சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வாயு கசிவு முழுமையாகச் சரி செய்யப்பட்டது.
இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, தொழில் நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கர்ஹவா அமர்வு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை துறைமுகம், சென்னை மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது
Hindusthan Samachar / GOKILA arumugam