Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 09 ஜூன் (ஹி.ச.)
நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஜூலை மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்வது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விரைவில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொகுதி மறுவரையறை விவகாரம் நாடு முழுவதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக பல்வேறு மாநிலங்கள் கவலை தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக தென் மாநிலங்கள், மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முன்னேற்றம் கண்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற அச்சத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், மக்களவையில் மசோதாவை நிறைவேற்றுவதற்கான ஆதரவை உறுதி செய்யும் முயற்சியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சில எம்.பி.க்கள் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாகக் கருதப்படுவதால், மசோதாவை நிறைவேற்றுவது எளிதாக இருக்கும் என ஆளும் தரப்பு நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், திராவிட முன்னேற்றக் கழகத்திடமும் ஆதரவு கோரும் முயற்சிகளை பாஜக மேற்கொள்ளலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எனினும், இதுகுறித்து எந்தக் கட்சியும் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கப்படவில்லை.
Hindusthan Samachar / VINOTH KUMAR P