Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 09 ஜூன் (ஹி.ச.)
மத்திய அரசுப் பணிகளுக்கான ஆர்.ஆர்.பி ஏ.எல்.பி மற்றும் எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, வரும் ஜூன் 12-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
போட்டித் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் வேலை தேடுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, முற்றிலும் கட்டணமின்றி இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், கிண்டியில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் மாலதி ஹெலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இந்த வாய்ப்பை சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த இலவச பயிற்சி வகுப்புகள், தேர்வுக்கான பாடத்திட்டம், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், நேர மேலாண்மை மற்றும் மாதிரித் தேர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசுப் பணி கனவுடன் உள்ளவர்களுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும் என தேர்வர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b