Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை , 09 ஜூன் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே அரசு அனுமதியின்றி இயங்கி வந்த சட்டவிரோத கிராவல் குவாரியை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் எடுக்கப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது.
அப்போது கந்தர்வக்கோட்டை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் எந்தவித முறையான உரிமமும் இன்றி கிராவல் மண் வெட்டி எடுக்கப்படுவது கண்டறியப்பட்டது.
ஆய்வின் போது, குவாரியில் இருந்து கிராவல் மண் ஏற்றுவதற்காக வந்திருந்த 4 டாரஸ் லாரிகளை அதிகாரிகள் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
லாரி ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தியதில், உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதது உறுதி செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் கந்தர்வக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக குவாரி நடத்தி வந்த நபர்கள் மீது சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுரங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற சட்டவிரோத குவாரிகளை முற்றிலும் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் சட்டவிரோத மண் அள்ளுதல் நடைபெற்றால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b