Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 09 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
கடந்த சில நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக, பாதுகாப்பு கருதி குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் குளிக்க கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது நீர்வரத்து சீராகி, வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதை அடுத்து, வனத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில், பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் விதிக்கப்பட்ட தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இதனால், சாரல் திருவிழாவை முன்னிட்டு குற்றாலத்திற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் அருவிகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாரல் மழையுடன் கூடிய அருவிக் குளியலை ஆனந்தமாக அனுபவித்து வருகின்றனர்.
அதேவேளையில், குற்றாலத்தின் பிரதான அருவியில் தற்போது பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, பிரதான அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணிகள் நிறைவடைந்த பின்னர் பிரதான அருவியிலும் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, அருவிப் பகுதிகளில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறும் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b