Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 09 ஜூன் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
வறுமையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்த மோடி அரசின் செயல்பாடுகள் கடந்த 12 ஆண்டுகளில் பின்னடைவை சந்தித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வேலை உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஆண்டுதோறும் மானிய விலையில் 12 எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 9 ஆக குறைக்கப்பட்டதாகவும், தற்போது அது 4 ஆக மேலும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கார்கே கூறியுள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், மக்களின் துயரங்களை உணராமல் அதிகார போதையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், மக்களின் பிரச்சினைகளை கண்டு முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் மல்லிகார்ஜுன கார்கே தனது பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P