Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 09 ஜூன் (ஹி.ச.)
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பிரச்சினை புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் மூத்த தலைவரும்,
4 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான நடிகை சதாப்தி ராய், கட்சித் தலைமையை கடுமையாக விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளாக தீதி (மம்தா பானர்ஜி) மிகவும் மாறிவிட்டார்.
அவருடன் எனக்கு இன்னும் நல்ல உறவு உள்ளது.
ஆனால் மக்களின் நலனே எனக்கு முக்கியம்.
கட்சிக்குள் ஊழல் அதிகரித்துள்ளது. தலைமைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகிவிட்டது.
அதனால்தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார்.
மேலும், கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே மம்தா பானர்ஜியை சந்திக்கும் வாய்ப்பு இருந்தது.
மற்ற எம்.பி.க்கள் மற்றும் மூத்த தலைவர்களின் குரல் ஒடுக்கப்பட்டது.
தொகுதி மக்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல முயன்றாலும் யாரும் கேட்கவில்லை.
அமைச்சர்களை கூட எளிதில் சந்திக்க முடியாத நிலை இருந்தது என்று குற்றம் சாட்டினார்.
எந்த முக்கிய முடிவுகளிலும் எம்.பி.க்களின் கருத்து கேட்கப்படவில்லை என்றும், தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த முயன்றால் “அமைதியாக இருங்கள்” என்று கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தன் மீது எந்த வித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்று கூறிய சதாப்தி ராய், எனது பெயரை காப்பாற்றிக்கொள்ளவோ அல்லது தனிப்பட்ட லாபத்திற்காகவோ நான் இந்த முடிவை எடுக்கவில்லை.
என் தொகுதி மக்களின் எதிர்கால நலனுக்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளேன் என்றார்.
கட்சி பலவீனமாக இருக்கும் நேரத்தில் ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
இப்போது தான் பல விஷயங்கள் எங்களுக்கு தெளிவாகியுள்ளன.
ஆட்சியில் இருந்த போது கட்சி எப்படி செயல்பட்டது என்பதை நாங்கள் நேரடியாக பார்த்தோம்.
அதனால்தான் மக்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறினார்.
சதாப்தி ராயின் இந்த கருத்துகள் மேற்கு வங்காள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA