தரங்கம்பாடி அருகே பூ வியாபாரி மீது கார் மோதி விபத்து - கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
மயிலாடுதுறை, 09 ஜூன் (ஹி.ச.) விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணிகள் சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வமாக திறக்கப்படாத போதிலும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அந்த சாலையை பயன்படுத்தி வரு
சாலை விபத்து


மயிலாடுதுறை, 09 ஜூன் (ஹி.ச.)

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணிகள் சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வமாக திறக்கப்படாத போதிலும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.

சாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்த எந்தவித தடுப்புகளும் அமைக்கப்படாததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பஞ்சாக்கை கிராமத்தைச் சேர்ந்த பூ வியாபாரி பழனிவேல்,

புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரி சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

தலையில் காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடைபெறுவதாகக் கூறி, பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்க டிவைடர்கள் மற்றும் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் எடுத்துரைத்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சாலை மறியல் காரணமாக சிதம்பரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam