Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 2 டிசம்பர் (ஹி.ச.)
கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கு மோதல் நீடித்து வருகிறது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகிய இருவரது ஆதரவாளர்கள் போரக்கொடி தூக்கினர். இதனால், காங்கிரஸ் மேலிடத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து கடந்த நவ.30 அன்று முதல்வர் சித்தாரமையாவின் வீட்டுக்கு வருகை தந்த துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அங்கு காலை உணவு சாப்பிட்டார். பின்னர் இருவரும் தனியாக 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு ‘தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை’ என இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று (டிச 02) மீண்டும் சித்தராமையா, சிவகுமார் இருவரும் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டுள்ளனர். இந்த முறை சிவகுமாரின் அழைப்பை ஏற்று சித்தராமையா அவரது வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.
அங்கு அவருக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது டி.கே. சிவகுமாரின் சகோதரரும் முன்னாள் எம்.பி.யுமான டி.கே. சுரேஷும் உடன் இருந்தார்.
இன்றைய சந்திப்பிற்கு பின்னர் நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் சித்தராமையா கூறியதாவது:
காலை விருந்து சிறப்பாக அமைந்தது. இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இருவரும் விரும்புகிறோம். எங்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலே மிகவும் முக்கியம். இது தொடர்பாக நாங்கள் விவாதித்தோம். நாங்கள் இருவரும் 2028ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் பயணிக்கிறோம். எங்களுக்குள் வேறுபாடு இல்லை.
காங்கிரசில் நாங்கள் ஒரே குரலாக இயங்கி வருகிறோம். கட்சியில் எந்த வித்தியாசமும் இல்லை. இது ஊடகங்கள் கிளப்பி விடுவது ஆகும். அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து காங்கிரஸ் உயர்மட்டம் முடிவு செய்ய வேண்டும். எதிர்காலத்திலும் நாங்கள் ஒன்றாக அரசை நடத்துவோம்.
எங்கள் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒன்றுபட்டுள்ளோம், நாங்கள் ஒன்றாக எதிர்ப்பை எதிர்கொள்வோம். காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவை கடைபிடிப்பேன். அவர்களை சந்திக்கச் செல்வேன்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Hindusthan Samachar / vidya.b