Enter your Email Address to subscribe to our newsletters
நெல்லை, 11 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடந்த 4 ஆம் தேதி கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த முத்துச்செல்வன் என்பவர், நடுரோட்டில் ஒரு பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டது மட்டுமின்றி, போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார், பொதுமக்கள் துணையுடன் முத்துச்செல்வத்தை, மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பாளையங்கோட்டை சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி வயிறு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 8 ஆம் தேதி இரவு பாத்ரூம் செல்வதாக கூறி சென்ற முத்துச் செல்வன் தப்பியோடினார். அவரை திருநெல்வேலி மாநகர போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டையில் விஷம் அருந்திய நிலையில் முத்துச்செல்வன் மயங்கி கிடப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN