Enter your Email Address to subscribe to our newsletters
கரூர், 11 அக்டோபர் (ஹி.ச.)
கடந்த செப்.27 ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு கரூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தக் குழு, கரூர் சுற்றுலா மாளிகையில் இருந்து, பொதுப் பணித் துறை - நீர் வள ஆதாரத் துறை திட்ட இல்லத்துக்கு அலுவலகத்தை மாற்றியுள்ளது.
இந்நிலையில், இந்த அலுவலகத்தில் தவெக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் பார்த்திபன் இன்று (அக் 11) விசாரணைக்கு ஆஜரானார்.
சுமார் 20 நிமிடங்கள் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
எதற்காக கரூர் கூட்டத்துக்கு அவர் வந்தார் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த விசாரணைக்காக பார்த்திபனுடன், தவெக கட்சியினர் மற்றும் தவெக வழக்கறிஞர்கள் வந்திருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b