Enter your Email Address to subscribe to our newsletters
மதுரை, 11 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.,வில் தேர்தல் பணிகளை முடுக்கி விடவும், மக்களை சந்திக்கவும், மாநில தலைவர் நாகேந்திரன் நாளை
(அக் 12) முதல், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செல்கிறார். இதன் துவக்க விழா பொதுக் கூட்டம், மதுரை மாவட்டம் அண்ணா நகரில் நாளை மாலை நடைபெறவுள்ளது.
இதில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அடுத்த நாள் அக் 13 ஆம் தேதி மாலை சிவகங்கை, அக் 14ல் செங்கல்பட்டு என, ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தில், கட்சி நிர்வாகிகளையும், மக்களையும் நாகேந்திரன் சந்திக்க உள்ளார். அவரின் சுற்றுப் பயணத்திற்கு, 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என பெயரிடப்பட்டு உள்ளது.
ரோடு ஷோவுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், நாகேந்திரனின் சுற்றுப்பயணத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்தி, அதன் வாயிலாக கட்சி நிர்வாகிகளையும், மக்களையும் நாகேந்திரன் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / vidya.b