Enter your Email Address to subscribe to our newsletters
மேட்டூர், 11 அக்டோபர் (ஹி.ச.)
கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்றிரவு (அக் 10) முதலே அதிகரிக்க தொடங்கியது.
அதன்படி, அணைக்கான நீர்வரத்து நேற்று விநாடிக்கு 6,033 கன அடியாக இருந்த நிலையில் இன்று (அக் 11) விநாடிக்கு 29,540 கன அடி அதிகரித்துள்ளது. அணைக்கான நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக நீர்மட்டம் நேற்று 111.48 அடியாக இருந்த நிலையில் இன்று 112.48 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு நேற்று 80.53 டிஎம்சியில் இருந்து இன்று 81.98 டிஎம்சியாகவும் உயரந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு, மேற்கு வாய்க்கால் பாசனத்துக்கு 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதாலும், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதாலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதனிடையே, அணையின் 16 கண் மதகு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு மைய அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர்.
குறிப்பாக, கடந்த 100 நாட்களுக்கு மேலாக வெள்ளக் கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b