Enter your Email Address to subscribe to our newsletters
திருவண்ணாமலை, 12 அக்டோபர் (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை வழிபட்டு கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்று வழிபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக திருவண்ணாமலைக்கு ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநில பக்தர்களும் திரை பிரபலங்களும் அதிக அளவில் திருவண்ணாமலைக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, அதனை தொடர்ந்து ராஜகோபுரம் நுழைவாயில் வழியாக பக்தர்கள் காலை 5 மணி முதல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், காலை முதலே பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரிப்பால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN