Enter your Email Address to subscribe to our newsletters
புதுடில்லி, 14 அக்டோபர் (ஹி.ச.)
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.) முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரிய கூட்டம் நடைபெற்றது.
மத்திய தொழிலாளர்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கினார். அதில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், வைப்புநிதியில் பகுதி அளவுக்கு பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை எளிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அத்தியாவசிய தேவைகள் (உடல்நலக்குறைவு, கல்வி, திருமணம்), வீட்டு தேவைகள், சிறப்பு சூழ்நிலை என 3 பிரிவாக விதிமுறைகள் வகைப்படுத்தப்பட்டன. தொழிலாளர் பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு உள்பட வைப்புநிதியில் தகுதியான இருப்பில் 100 சதவீதம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம்.
பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு கல்விக்கு 10 மடங்கும், திருமணத்துக்கு 5 மடங்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றம், நிறுவனம் மூடல், தொடர்ச்சியாக வேலையின்மை, தொற்றுநோய் பரவல் ஆகிய சிறப்பு சூழ்நிலைகளுக்கு காரணம் தெரிவிக்காமல் பணம் எடுக்கலாம்.
அதே சமயத்தில், உறுப்பினர்களின் எதிர்கால தேவைக்காக உறுப்பினர் கணக்கில் 25 சதவீத பங்களிப்பை குறைந்தபட்ச இருப்பாக எப்போதும் பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM