Enter your Email Address to subscribe to our newsletters
தேனி, 14 அக்டோபர் (ஹி.ச.)
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் உள்ளது தான் சுருளி அருவி.
இந்த அருவிக்கு வருடத்தின் பெரும்பாலான நாட்களில் நீர்வரத்து இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வந்து குளித்து செல்வது வழக்கம்.
மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவி பகுதிக்கு நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
தேனி மாவட்டத்தின் சின்ன குற்றாலம் என்றழைக்கப்படும் இந்த அருவிக்கு வரும் நீரானது அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக வருவதால் ,தண்ணீர் மூலிகை தன்மை நிறைந்ததாக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சில நாட்களில் வெள்ள நீர் குறைந்ததால் குளிக்க அனுமதித்தனர்.
நேற்று (அக் 13) இரவு மேகமலை, இரவங்கலாறு ஹைவேவிஸ், மணலாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அருவியில் இன்று (அக் 14) காலை மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்தவுடன், அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b