Enter your Email Address to subscribe to our newsletters
கள்ளக்குறிச்சி, 14 அக்டோபர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
10ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவை தொடர்ந்து புதுப்பித்து கடந்த செப். 30 அன்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின், வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் வரும் டிச. 31 அன்று 45 வயதிற்குள்ளும், இதர இனத்தினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
10ம் வகுப்பு தோல்விக்கு ரூ. 200, தேர்ச்சிக்கு ரூ. 300, மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு ரூ. 400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600, மாற்றுத்திறனாளிகள் 10ம் வகுப்பு வகுப்பு தோல்வி, தேர்ச்சி இரண்டுக்கும் ரூ. 600, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்புவோர், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை காண்பித்து அனைத்து வேலை நாட்களிலும், இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். https://employmentexchange.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் வரும் டிச. 31 தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b