Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (அக் 15) கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்த போது தவெக தலைவர் நடிகர் விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கரூர் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று கூறியிருந்தார்.
இது குறித்துப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,
கரூர் துயர சம்பவத்தில் ஒரே நாளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி? உடற்கூராய்வு செய்வதில் அவசரம் காட்டப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கமளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
கரூர் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 2 உடற்கூராய்வு மேஜைகள் இருந்தன. கூடுதலாக 3 மேஜைகள் அமைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது.
மேலும், அவசர நிலையைக் கருதி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றே நள்ளிரவில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த நாள் மதியம் வரை 39 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது. 14 மணி நேரம் உடற்கூராய்வு நடந்தது.
கூடுதலாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு,மொத்த 25 மருத்துவர்கள் உடற்கூராய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்
இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.
Hindusthan Samachar / vidya.b