பாட்டாளி இளைஞர் சங்கம் மாநில செயற்குழுக் கூட்டம் - தீர்மானங்கள்
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச) பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் முன்னிலையிலும், பாட்டாளி இளைஞர் ச
Anbu


சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச)

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் முன்னிலையிலும், பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவர் முனைவர் கணேஷ்குமார் அவர்கள் தலைமையிலும் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

01 : அரசுத் துறைகளில் காலி இடங்களை நிரப்ப மறுக்கும் திமுக அரசுக்கு கண்டனம்; 6.5 லட்சம் இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தல்

திமுக ஆட்சிக்கு வந்தால், பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள மூன்றரை இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு காலியிடங்களை நிரப்பவோ, புதிய பணியிடங்களை ஏற்படுத்தவோ திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கமாக அரசுத் துறைகளில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு மாற்றாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை ஆறரை லட்சமாக உயர்ந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் வாக்குறுதியின்படி அரசுத்துறை காலியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கத் தவறிய திமுக அரசுக்கு பாட்டாளி இளைஞர் சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 50,000 பேருக்கு மட்டும் தான் நிலையான பணி வழங்கப்பட்டிருக்கிறது. அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருக்கும் படித்த இளைஞர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தமிழக அரசு இதுவரை வழங்கியுள்ள நிலையான பணிகளின் எண்ணிக்கை 1% கூட அல்ல. அரசுத் துறைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அரசு நிர்வாக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வுகாணும் வகையில் அரசுத் துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களையும் நிரப்ப வேண்டும். அதன் மூலம் 6.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாட்டாளி இளைஞர் சங்கம் வலியுறுத்துகிறது.

02 : தனியார் நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்!

தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்படுகிறது. தமிழகத்தின் பெருந்தொழில் நிறுவனங்களில் பிகார், ஜார்க்கண்ட், உத்தர்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பணியாளர்கள் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. இதனால் தமிழக இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட 10&க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 80% வரை இட ஒதுக்கீடு வழக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75% தமிழக இளைஞர்களுக்கு வழங்க சட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், நான்கரை ஆண்டுகள் ஆகியும் அத்தகைய சட்டம் நிறைவேற்றப்படவில்லை.அதனால் தமிழக இளைஞர்கள் வேலையில்லாமல் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை மாற்ற, தேர்தலில் வாக்குறுதி அளித்தவாறு தனியார் நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை பாட்டாளி இளைஞர் சங்கம் கோருகிறது.

03 : முதல்வர்கள், பேராசிரியர்களை நியமித்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் இழந்த தரத்தை மீட்டெடுக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் உயர்கல்வியின் அடையாளங்களாக திகழ்ந்தவையும், நோபல் பரிசு வென்ற சர். சி.வி இராமன் போன்ற அறிவியலாளர்களை உருவாக்கியவையுமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் இன்றைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9000&க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால், அரசு கல்லூரிகளின் கல்வித்தரம் சீரழிந்து மாணவர்கள் சேருவதற்கு முன்வராத அவல நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையை மாற்றும் வகையில் முதல்வர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மாணவர்கள் போட்டிப்போட்டு சேரத் துடிக்கும் உயர்கல்வி ஆலயங்களாக மாற்ற வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

04 : தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்!

இந்தியாவில் பீகார், கர்நாடகம், தெலுங்கானா, ஒதிசா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கணக்கெடுப்பின் அடிப்படையில் பல்வேறு சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கர்நாடகா பத்தாண்டுகளுக்கு முன்பே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்துவிட்டநிலையில், இப்போது இரண்டாவது முறையாக செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 18&ஆம் தேதி முடிக்கப்பட்டு, திசம்பர் மாதத்தில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஆனால், தமிழக அரசு மட்டும் தனக்கு அதிகாரம் இல்லை என்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தொடர்ந்து மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும். மத்திய அரசின் சார்பில் அடுத்த ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும்கூட, மாநிலம் சார்ந்த சமூகநீதி தேவைகளுக்கு மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதுதான் பொருத்தமானதாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். இதற்கான அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெளியிட வேண்டும்.

05 : வன்னியர் இட ஒதுக்கீடு: திசம்பர் 17&ஆம் நாள் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு துணை நிற்க பாட்டாளி இளைஞர் சங்கம் உறுதி ஏற்றுக் கொள்கிறது!

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கலாம் என்றும், அதற்கான தரவுகளை திரட்டி இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றலாம் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி தீர்ப்பளித்தது. ஆனால் அதன்பின் 1,295 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், இன்றுவரை வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருந்தது. ஆனால், அதன் பின் 1008 நாள்களாகியும் வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பரிந்துரை அறிக்கையை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அரசிடம் தாக்கல் செய்யவில்லை. இதற்காக கூறப்படும் நியாயமற்ற காரணங்களை ஏற்க முடியாது.

வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு செய்யும் துரோகத்தைக் கண்டித்தும், வன்னியர்களுக்கு உடனடியாக உள்இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் வரும் திசம்பர் 17&ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப் பெரிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிவித்திருப்பதை இக்கூட்டம் வரவேற்கிறது. இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த துணை நிற்கவும், கடுமையாக உழைக்கவும் பாட்டாளி இளைஞர் சங்கம் உறுதியேற்றுக் கொள்கிறது.

06 : பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவராக அ.கணேஷ்குமார் அவர்களை நியமித்த கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு நன்றி!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் அ.கணேஷ்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தாம் சிறப்பாக பணியாற்றி, கட்சியின் வளர்ச்சிக்கு துணை நின்ற இந்தப் பதவியில் முனைவர் கணேஷ்குமார் அவர்களை நியமித்த கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு இந்தக் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக செயல்படவும், அவர் இடும் பணிகளை விரைந்து செயல்படுத்தி முடிக்கவும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்கவும் பாட்டாளி இளைஞர் சங்கம் உறுதியேற்கிறது.

Hindusthan Samachar / P YUVARAJ