Enter your Email Address to subscribe to our newsletters
நெல்லை, 15 அக்டோபர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் (28), இரண்டு போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் வழக்கு விசாரணைக்காக அவரை போலீசார் நெல்லை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த வினோத்குமாரின் தாயார், மகனின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினைகளையும், அவமானத்தையும் எண்ணி, அனைவர் முன்னிலையிலும் அவரைக் கடுமையாகக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
நீதிமன்ற வளாகத்தில் தாயின் கண்டிப்புக்கு உள்ளான வினோத்குமார், மிகுந்த மன உளைச்சலுடனும் அவமானத்துடனும் சிறைக்குத் திரும்பியுள்ளார். சக கைதிகளிடம் கூட சரியாகப் பேசாமல் விரக்தியின் உச்சத்தில் காணப்பட்ட அவர், கடந்த 14-ஆம் தேதி சிறை வளாகத்தில் உள்ள கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து சிறைத்துறை டிஐஜி முருகேசன் நடத்திய தீவிர விசாரணையிலேயே இந்தத் தகவல் வெளிவந்துள்ளது. பொது இடத்தில் தாய் கண்டித்ததால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல்தான் அவர் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என சிறைத்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்தத் தகவலின் அடிப்படையில், தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்ற தாயின் கண்டிப்பே மகனின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்ற தகவல், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN