Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 15 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகை வரும் 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, பெங்களூர், திருவனந்தபுரம், கொல்லம் உட்பட பல்வேறு நகரங்களுக்கு 15 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.
ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு அதிகரித்து உள்ள நிலையில், குடும்பத்துடன் செல்லும் பெரும்பாலானோர் ரெயில்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதனால் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. பெரும்பாலான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100-ஐ தாண்டியுள்ளது.
ஆம்னி பஸ்களை விட ரெயில்களில் கட்டணம் குறைவு என்பதால், வழக்கமான ரெயில் மற்றும் சிறப்பு ரெயில்களில் டிக்கெட் கிடைக்காதோர் அடுத்ததாக பயணம் செய்யும் ஒரு நாளுக்கு முன்னதாக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க காத்திருக்கிறார்கள்.
எனவே தீபாவளியை முன்னிட்டு மேலும் கூடுதல் சிறப்பு ரெயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில்களை இயக்க ரெயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / JANAKI RAM