Enter your Email Address to subscribe to our newsletters
தென்காசி, 15 அக்டோபர் (ஹி.ச.)
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிகப்படியாக கனமழை பெய்து வந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதனால், குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (அக் 14) சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், குற்றால அருவிகளில் இன்று (அக் 15) சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அருவிகளில் நீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் மிதமான தண்ணீர் விழுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று குளித்து வருகின்றனர்.
தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மெயின் அருவி பகுதியில் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் இங்கு அவ்வப்போது மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதியும், பெரும் ஆபத்துகளை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / vidya.b