பூண்டி ஏரியின் உபரி நீர் வெளியேற்றம் 4,500 கனஅடியாக உயர்வு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்று (அக் 16) தொடங்குகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
பூண்டி ஏரியின் உபரி நீர் வெளியேற்றம் 4,500 கனஅடியாக உயர்வு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்று (அக் 16) தொடங்குகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூரில் அமைந்துள்ள சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூண்டி ஏரியில் இருந்து முதற்கட்டமாக, நேற்று (அக்.,15) 700 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

நேற்றிரவும் கனமழை தொடர்ந்ததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக, ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 2,300 கனஅடியில் இருந்து 4,500 கனஅடியாக இன்று (அக் 16) அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உபரி நீர் கால்வாய் அருகே தாழ்வான பகுதியில் உள்ள மக்கள், எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b