Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 16 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதால் சென்னை, டெல்டா உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை இன்று விலகக்கூடும். அதேநேரம், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், மாஹே, தெற்கு உள் கர்நாடகா, ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 19-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
கடலோர தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (அக்.16) முதல் 18-ம் தேதி வரை, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19 முதல் 21-ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (17-ம் தேதி) சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
18-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 20-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை எண்ணூரில் 14 செ.மீ. கத்திவாக்கத்தில் 10 செ.மீ. மணலி புதுநகர், நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 9 செ.மீ. சென்னை விம்கோ நகரில் 8 செ.மீ. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் 7 செ.மீ. சென்னை பெரம்பூர், பேசின் பாலம், திருவொற்றியூர், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, அழகரை எஸ்டேட், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டம் வானமாதேவி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b