Enter your Email Address to subscribe to our newsletters
தென்காசி, 18 அக்டோபர் (ஹி.ச.)
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் இன்று (அக் 18) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வருகிற 23ம் தேதி வரை நல்ல மழை பெய்யக்கூடும் என்றும் அலர்ட் செய்திருக்கிறது.
இதனிடையே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தென்காசி மாவட்டத்தையொட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் குற்றால அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐந்தருவி, மெயின் அருவியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b