பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி - நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவு
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.) கடந்த 2018-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும், தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவிட்
பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி -  நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவு


சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)

கடந்த 2018-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டும், தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி திருநாள் அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கமான ஒன்றுதான் என்கின்ற போதிலும் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.

பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும் கடந்த 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை விதித்தது.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெளிவுபடுத்திய சுப்ரீம் கோர்ட்டு, திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018-ம் ஆண்டில் இருந்து தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7முதல் 8 மணி வரையும் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று,

காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது.

இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டுகளை போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும் இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்ததமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள்,காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்றுமாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

* மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

* அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சர வெடிகளை தவிர்க்க வேண்டும்.

* ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

* குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை பொதுமக்கள் பின்பற்றுவதோடு சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில்

கூட்டாக வெடித்து இந்த தீபாவளியை மாசற்ற தீபாவளியாக மாற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b