Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி, 22 அக்டோபர் (ஹி.ச.)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, விரைவு தரிசனத்திற்கான 100 ரூபாய் கட்டணம் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.
மேலும் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான பல்வேறு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு மூன்று வழிகள் பின்பற்றப்படுகிறது பொது தரிசனம் கட்டண தரிசனம் என்று சொல்லக்கூடிய விரைவு தரிசனம் மற்றும் முதியோர்களுக்கான விரைவு தரிசனம் என மூன்று நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
அதில் விரைவு தரிசனத்திற்கான 100 ரூபாய் கட்டணத்தை இன்று முதல் சஷ்டி திருவிழா முடியும் வரை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி விரைவில் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN