மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் தங்களின் அவசர உதவிக்கு நாம் தமிழர் கட்சி அலைபேசி எண்ணை அழைக்கலாம் - சீமான் அறிவிப்பு
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.) மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாத்துப் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போதே திட்டமிடுங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் இது தொடர
Seeman


Tweet


சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)

மழைக் காலங்களில் வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாத்துப் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போதே திட்டமிடுங்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்,

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழைக்காலம் தொடங்கிவிட்டது. ஐப்பசி முதல் மார்கழி வரை இனி வரும் மூன்று மாதங்கள் கடுமையான மழைப்பொழிவு இருப்பதற்கான அறிகுறிகள் தற்போதே தென்படுகிறது. வானிலை முன்னறிவிப்புகளும் அதனை நன்கு உறுதிப்படுத்துகின்றது.

ஆகவே, என் பெருமதிப்பிற்குரிய பெற்றோர்கள், அன்பிற்கினிய தம்பி - தங்கைகள் பெருமழைக் காலங்களில் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாத்துப் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போதே திட்டமிட வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.

குடிநீரை எப்போதும் நன்கு காய்ச்சி குடிங்கள். வெளியில் செல்லும்போதும் காய்ச்சி ஆறவைத்த குடிநீர், குடை, மழை பாதுகாப்பு ஆடை ஆகியவற்றை கட்டாயம் எடுத்துச்செல்லுங்கள்.

அலைபேசி, மின்கல விளக்குகள் ஆகியவற்றை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மின்னேற்றம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

மெழுகுவர்த்தி, பால், ரொட்டி, உலர் பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், தேவையான மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை எப்போதும் சேமிப்பில் வைத்திருங்கள்.

தத்தம் வீடுகளில் மழைநீர்க் கசியும் பகுதிகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்து விடுங்கள். சரி செய்ய இயலாத, பாதுகாப்பற்ற இடத்திலிருந்து சற்று விலகி இருங்கள். அதேபோன்று, வீடுகளில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்தால் மின் பணியாளர் மூலம் அவற்றை மழை இல்லாத நாட்களில் சரி செய்து கொள்ளுங்கள். மின் சாதனங்களை எப்போதும் கவனமுடன் கையாளுங்கள்.

மழைக்கால நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க வெளியில் சென்று வரும்போது கால்களை நன்கு கழுவிய பிறகு வீட்டிற்குள் செல்லுங்கள். கிருமி நாசினி மூலம் வீட்டினை எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள்.

சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரில் நடந்து செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். வாகனங்களில் செல்லும்போது பள்ளம் மேடுகளை அவதானித்து கவனமுடன் செல்லுங்கள்.

மழை நீரிலிருந்து தற்காக்க மின்மாற்றிகள், மின்பெட்டிகள் அருகே செல்ல வேண்டாம். இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் விலையுயர்ந்த மின் சாதனங்களை அணைத்து வைப்பதோடு, மரத்தடியில் நிற்பதையும் தவிர்க்கவும்.

அறுந்து விழுந்த மின்கம்பிகள் அருகே ஒருபோதும் செல்ல வேண்டாம். உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கவும் மறக்க வேண்டாம்.

மழைக்கால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, அதற்கேற்ப தங்களது பணிகளையும், பயணங்களையும் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

நேரில் செல்ல அவசியமில்லாத பணிகளையும், கணிணி, அலைபேசி மூலம் செய்து முடிக்க முடிந்த பணிகளையும், தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமே முடித்து விடுங்கள்.

மழைப்பொழிவு கடுமையாக உள்ள நேரங்களில் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். குளிர்ச்சியான பானங்களை அருந்துவதை தவிர்த்து, சூடான திரவ உணவுகளையும், நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமுள்ள சத்தான உணவுகளையும் உண்ணுங்கள்.

மக்களை அரசு பாதுகாக்காதபோது, மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை எனும் நிலையில், எதிர்வரும் கடுமையான மழைக்காலத்தை கவனமுடன் கடப்போம்! நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்போம்

நாம் தமிழர் கட்சி உறவுகள் தத்தம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட இன்றியமையாத உதவிகள் வழங்க தேவையான திட்டமிடலை முன்கூட்டிய தொடங்க வேண்டுமெனவும் அறிவுறுத்துகிறேன்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகள் தங்களின் அவசர உதவிக்கு அழைக்க வேண்டிய நாம் தமிழர் கட்சி அலைபேசி எண்கள்:-

+91 9943189552+91 9600709263+91 9500767589+91 9003935174+91 7667412345

என்றும் உங்கள் ஒவ்வொருவர் மீதான அன்புடனும், அக்கறையுடனும் உங்கள் உடன் பிறந்தான்.

என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ