Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 23 அக்டோபர் (ஹி.ச.)
கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி இந்திய துணை ஜனாதிபதி பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற்றது.
இத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழகத்தில் உள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இந்நிலையில் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன்
4 நாள் பயணமாக வருகிற 27ம் தேதி தமிழகம் வருகிறார். வருகிற 27ம் தேதி சென்னைக்கு வரும் அவர், தனது வீட்டில் தங்குகிறார்.
பின்னர், சென்னையில் அவருக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். பாஜவினரும் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர். அதைத் தொடர்ந்து, 28ம் தேதி கோவை செல்லும் அவர், அங்கும் அவருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார். மேலும் பேரூர் மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
29ம் தேதி சொந்த ஊரான திருப்பூர் செல்கிறார். அங்கும் அவருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் 30ம் தேதி மதுரை செல்கிறார்.
அங்கிருந்து பசும்பொன் சென்று, முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மதுரையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b