இந்திய கடல்சார் வாரம் 2025 மற்றும் உலக கடல்சார் உச்சி மாநாடு - தமிழக அரசு பங்கேற்க முன்னேற்பாடுகள் தொடக்கம்
சென்னை, 24 அக்டோபர் (ஹி.ச.) மும்பையில் நடைபெறும் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் துறை சார்பில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறும் இந்திய கடல்சார் வாரம் 2025 மற்றும் உலக கடல்சார் உச்சி மாநாட்டில் (Global Maritime Summit 2025), தம
இந்திய கடல்சார் வாரம் 2025 மற்றும் உலக கடல்சார் உச்சி மாநாடு - தமிழக அரசு பங்கேற்க முன்னேற்பாடுகள் தொடக்கம்


சென்னை, 24 அக்டோபர் (ஹி.ச.)

மும்பையில் நடைபெறும் மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் துறை சார்பில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறும் இந்திய கடல்சார் வாரம் 2025 மற்றும் உலக கடல்சார் உச்சி மாநாட்டில் (Global Maritime Summit 2025), தமிழ்நாடு அரசு பங்கேற்க உள்ளது.

தமிழ்நாட்டின் கடல்சார் திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில், 18 செப்டம்பர் 2025 அன்று சென்னையில் “நீலப்பொருளாதார மாநாடு – 2025” வெற்றிகரமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தேசிய அளவில் நடைபெறும் இந்திய கடல்சார் வார விழாவில், தமிழ்நாடு முக்கிய பங்காற்றுகிறது.

இந்நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட கடல்சார் நாடுகளின் பிரதிநிதிகள், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். உலகளாவிய கடல்சார் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன், புதிய தொழில்நுட்ப புதுமைகள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நவீன கொள்கைகள் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

தமிழ்நாட்டின் சார்பில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், தொழில்துறை அமைச்சர், கடல்சார் வாரியம், தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கொண்ட குழு பங்கேற்கவுள்ளனர்.

இக்குழு தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகம், தொழில், நீலப்பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சியை முன்னெடுத்து, முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் வணிக அமர்வுகள் நடத்தவுள்ளது.

தமிழ்நாட்டின் கடல்சார் திறன்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பண்டைய கடல்வழி மரபு அனைத்தும், ஒருங்கிணைந்து இவ்விழாவில் வெளிப்படுத்தப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b