Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 அக்டோபர் (ஹி.ச)
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
எனவே தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை எழுதியிருக்கும் கடிதத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
2,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில், பணி நியமன உத்தரவுக்காக 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை பணம் இடைத்தரகர்கள் மூலம் பெறப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 150 பேர் பணம் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை, தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி என பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக நடைபெற்ற தேர்வில், பணம் கொடுத்து முறைகேடாக நூற்றுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அத்தேர்வை நேர்மையாக எதிர்கொண்ட பிற தேர்வர்களைக் கொந்தளிப்பு அடையச் செய்திருக்கிறது.
எனவே, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு மீதும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதும் தமிழகக் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தவறு நடைபெற்றிருக்கும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ