Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச.)
மோந்தா புயல் ஆந்திராவில் கரை கடந்து சென்றதை அடுத்து, தமிழகத்தில் 4ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஆந்திராவை கடந்து சென்ற மோந்தா புயல் தெலுங்கான மாநிலம் நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளதால் அங்கும் உயர் நிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்திலும் கனமழை பெய்யும். கர்னூல், மெகபூப் நகர் பகுதிகளிலும், வாரங்கல் பகுதி, கம்மம், விஜயவாடா பகுதியில் அதீத மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு ஐதராபாத் விட்டு விலகி சத்தீஸ்கர் மாநிலத்துக்கு பகுதிக்கு நகரும். ராய்ப்பூர், நாக்பூர் வழியாக இரு காற்று இணைந்து மகாராஷ்ட்ரா மாநிலத்தை மையமாக வைத்து மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. தமிழகத்தில் இன்று (அக்.30-ம் தேதி) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை அக்.31 முதல் நவ.4-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், கனமழை பெய்ய வாய்ப்பில்லை.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (அக்.30-ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.
தமிழகத்தில் நேற்று(அக் 29) காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 7 செ.மீ மழை, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 6 செ.மீ மழை, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 5 செ.மீ மழை, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, மாஞ்சோலை, கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம், நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b