தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம்
சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச) தமிழ்நாட்டில் மேலும் 2 சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு, நாட்டிலேய
தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம்


சென்னை, 30 அக்டோபர் (ஹி.ச)

தமிழ்நாட்டில் மேலும் 2 சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு, நாட்டிலேயே கல்வி வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களை காட்டிலும் கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் தமிழகம் தொழில்வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக மாற்றவும், தமிழக இளைஞர்களுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும், 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தை பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கான முயற்சியாக தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, ஏராளமான சிப்காட் எனப்படும் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்ட வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் 23 சிப்காட் தொழிற்பூங்காக்களே இருந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4 வருடங்களிலேயே 30க்கும் மேற்பட்ட சிப்காட் பூங்காக்கள் இதுவரை திறக்கப்பட்டுள்ளன.

தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து எடுத்து வருகிறது. தற்போது 40 தொழில் பூங்காக்கள் உள்ள நிலையில் மேலும் 21 பூங்காக்களை 21,404 ஏக்கர் பரப்பளவில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி காஞ்சிபுரம், மதுரையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூருக்கு அருகே 422.33 ஏக்கரில் ரூ.530 கோடியில் சிப்காட் தொழில் பூங்கா அமைகிறது.

காஞ்சிபுரம் சிப்காட் தொழில் பூங்கா மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மதுரை மாவட்டத்தில் வஞ்சிநகரம், கொடுக்கம்பட்டி, பூதமங்கலம் ஆகிய 3 கிராமங்களில் 278.26 ஏக்கரில் சிப்காட் பூங்கா அமைகிறது. ரூ.68 கோடியில் அமைய உள்ள சிப்காட் தொழில் பூங்கா மூலம் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b