Enter your Email Address to subscribe to our newsletters

புதுடில்லி, 31 அக்டோபர் (ஹி.ச.)
சாபஹார் துறைமுகம், ஈரானின் சிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ளது. ஈரானின் துறைமுகங்களிலேயே மிகப் பெரியதும், அங்குள்ள துறைமுகங்களில் இந்திய பெருங்கடல் பகுதிக்கு நேரடி அணுகலை கொண்டதும் இந்த சாபஹார் துறைமுகம் மட்டுமே.
குஜராத் மற்றும் மும்பை கடற்பகுதிகளிலிருந்து நெருக்கமானதாகவும் இத்துறைமுகம் உள்ளது. இன்னும் எளிதாக சொல்வதென்றால், குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்திற்கும் சாபஹார் துறைமுகத்திற்கும் இடையேயான துாரம், புதுடில்லி - மும்பை இடையேயான துாரத்தை விட குறைவானது.
சாபஹார் துறைமுகமானது பாகிஸ்தானைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான வர்த்தக வழியை வழங்குகிறது. இது இந்தியா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சர்வதேச வழித்தடமாகும்.
ஆப்கானிஸ்தானுக்கு மனித நேய உதவிகளை வழங்குவதற்கு இந்தியாவுக்கு மிக முக்கியமான துறைமுகமாக இது திகழ்கிறது.
கடந்த 2024 ல் அந்நாட்டின் சாபஹார் துறைமுகத்தை இயக்குவது தொடர்பாக இந்தியா ஈரானுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததுடன், ரூ.2,000 கோடிக்கு அதிகமான செலவில் துறைமுகத்தை சுற்றிலும் கட்டமைப்புகளை இந்தியா உருவாகியுள்ளது.
திட்டம் துவங்கிய காலத்தில் அமெரிக்கா - இந்தியா இடையே நல்லுறவு இருந்தது. இதனால், இத்திட்டத்துக்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளிக்கவில்லை. இந்தியாவுக்கு முழு விலக்கு அளித்து இருந்தது.
தற்போது, அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பிரச்னை உள்ளது. இதனால் ஈரானுக்கு எதிராக தடைகளை அந்நாடு அறிவித்து வருகிறது.
மேலும், சாபஹார் துறைமுக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு இருந்த சலுகையை ரத்து செய்யவும் அமெரிக்கா திட்டமிட்டு இருந்தது.
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது:
சாபஹார் திட்டத்துக்கு இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட சலுகையை மேலும் 6 மாதத்துக்கு தொடர அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு உறுதி பூண்டுள்ளோம்.
இது தொடர்பாக இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / JANAKI RAM