Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 1 நவம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கார்ணாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் சிவா (வயது 27), கூலி தொழிலாளி, இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு 16 வயதுடைய சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக பெங்களூருக்கு கடத்தி சென்று அங்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் மாயமான சிறுமி குறித்து அவரது பெற்றோர் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிவா சிறுமியை கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது.
பின்னர் போலீசார் சிவாவிடம் இருந்து சிறுமியை மீட்டு விசாரணை நடத்தியதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமி மாயமான வழக்கை போலீசார் போக்சோ வழக்காக பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சிவாவிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி காஞ்சனா உத்தரவிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார், அதன் பின்னர் சிவாவை காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN