பவுர்ணமி கிரிவல கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
சென்னை, 1 நவம்பர் (ஹி.ச.) திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள கிரிவலப்பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல
பவுர்ணமி கிரிவல கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


சென்னை, 1 நவம்பர் (ஹி.ச.)

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.

கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள கிரிவலப்பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

அந்த வகையில், நவம்பர் மாதத்துக்கான பவுர்ணமி கிரிவலம் வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 4-ந்தேதி 8 பெட்டிகள் கொண்ட மெமு சிறப்பு ரெயில்கள் விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே இயக்கப்படும்.

விழுப்புரத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதே போல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்த ரெயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM