Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 10 நவம்பர் (ஹி.ச.)
தலைநகர் டெல்லி செங்கோட்டைக்கு அருகே இன்று சக்திவாய்ந்த வெடிவிபத்தால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சில கடைகளும், வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு டெல்லி காவல்துறையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.
செங்கோட்டைக்கு அருகிலுள்ள சந்தை பகுதியில் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது.
இந்த சத்தத்தால் நிலைகுலைந்த மக்கள், என்ன நடக்கிறது என்று தெரியாமல் பீதியில் உறைந்தனர்.
வெடி விபத்தின் அதிர்வால், அப்பகுதியில் இருந்த பல கடைகளின் ஜன்னல்கள், கதவுகள் நொறுங்கி சேதமடைந்தன.
உடனடியாக, டெல்லி காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை தீவிரம்
தகவல் அறிந்ததும்,
டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
வெடிவிபத்து நிகழ்ந்த பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை.
இது தீவிரவாத தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டாலும், அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம், டெல்லி மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த கூடுதல் தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Hindusthan Samachar / Durai.J