Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 நவம்பர் (ஹி.ச.)
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவ 11) விசாரணைக்கு வருகின்றது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக தேர்தல் கமிஷனை கண்டித்து இன்று (நவ 11) தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்களில் திமுக, காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
சென்னை தங்கசாலையில் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக பதாகைகளும், கோஷங்களும் எழுப்பட்டன.
சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b