Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 நவம்பர் (ஹி.ச.)
இந்திய தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகச் செங்கோட்டை விளங்கி வருகிறது. இங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, கடந்த 10ஆம் தேதி மாலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு காரில் இருந்த வெடிகுண்டுகளே காரணம் என டெல்லி போலீசார் உறுதிப்படுத்தியிருந்தனர்.
டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளி டாக்டர் உமர் உன் நபி டெல்லிக்குள் நுழையும் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன.
இதில் உமர் கட்டணம் செலுத்தும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளன. அவர் பதர்பூர் எல்லை வழியே ஐ20 காரில் வருகிறார்.
சுங்க சாவடியில் காரை நிறுத்தி, பணம் எடுத்து, சுங்க சாவடி ஊழியரிடம் கொடுக்கிறார். அவர் முக கவசம் அணிந்தபடி உள்ளார். வீடியோவில் உமரின் முகம் தெளிவாக தெரிகிறது. அவருடைய அடையாளம் உறுதியாகி உள்ளது. காரின் பின் சீட்டில் பெரிய பை ஒன்றும் உள்ளது.
உமர் பணம் கொடுக்கும்போது, அடிக்கடி சி.சி.டி.வி. கேமராவை பார்ப்பதும், கண்காணிக்கப்படுகிறோமா என எச்சரிக்கையாக இருப்பதும் தெரிகிறது.
உமரின் வாகனம் குறித்து வேறு எந்த ஆதாரம் கிடைக்கும் வாய்ப்பு பற்றி அதிகாரிகள் முழு அளவில் விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b