Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 நவம்பர் (ஹி.ச.)
இந்திய தலைநகர் டெல்லி செங்கோட்டையில் கடந்த 10ம் தேதி நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். தலைநகரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ குழு அமைத்து விசாரித்து வருகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் டாக்டர்கள் போன்ற உயர்நிலையில் உள்ளவர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. மேலும், இது தொடர்பாக அடுத்தடுத்து டாக்டர்கள் சிக்கி வருகின்றனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டில்லியில் 8 இடங்களில் இதுபோன்று காரில் வெடிபொருட்களை நிரப்பி தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரிய வந்தது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், டில்லியில் உள்ள மஹிபால்பூரில் உள்ள ரேடிசன் ஓட்டல் அருகே பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. இன்று (நவ 13) காலை 9.18 மணியளவில் தீயணைப்புத்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.
மேலும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சோதனையில், மர்மப் பொருள் ஏதும் தென்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சத்தம் தொடர்பாக அங்கிருந்த உள்ளூர் மக்களிடம் விசாரித்த போது, டில்லி அரசு பேருந்தின் டயர் வெடித்த சத்தம் தான் அது என்று கூறியுள்ளனர்.
இருப்பினும் அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b